1 யெகோவா சீனாய் மலையின்மேல் மோசேயுடன் பேசிய காலத்திலிருந்த, ஆரோன் மோசே ஆகியோரின் குடும்ப வம்சவரலாறு:
2 ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர். 3 இவர்கள் எல்லோரும் ஆசாரியர்களாகப் பணிசெய்வதற்கு நியமிக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட ஆரோனின் மகன்கள். 4 ஆனால் நாதாபும், அபியூவும் சீனாய் பாலைவனத்தில் யெகோவாவுக்கு முன்பாக அங்கீகரிக்கப்படாத நெருப்பினால், காணிக்கையைச் செலுத்தியபோது, அவருக்கு முன்னால் செத்து விழுந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. அதனால் எலெயாசாரும், இத்தாமாரும் மட்டுமே தங்கள் தந்தையான ஆரோனின் வாழ்நாட்களில் ஆசாரியர்களாகப் பணிசெய்து வந்தார்கள்.
5 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 6 “ஆசாரியன் ஆரோனுக்கு உதவிசெய்யும்படி லேவி கோத்திரத்தாரை அவனுக்கு முன் அழைத்து வா. 7 அவர்கள் சபைக் கூடாரத்தில், இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து, அவனுக்காகவும், முழு சமுதாயத்திற்காகவும் கடமைகளைச் செய்யவேண்டும். 8 அவர்கள் சபைக் கூடாரத்தின் பொருட்கள் எல்லாவற்றையும் பராமரித்து, இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதினால் இஸ்ரயேலின் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும். 9 ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உதவியாக லேவியரைக் கொடுக்கவேண்டும். அவனுக்கு அர்ப்பணமாய்க் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர்கள் இவர்களே. 10 ஆரோனையும், அவன் மகன்களையும் குருத்துவப் பணிசெய்யும்படி நியமிக்கவேண்டும். பரிசுத்த இடத்தை நெருங்கும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.
11 மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 12 “ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்களுக்கும் கர்ப்பந்திறந்து பிறக்கும் மூத்த ஆண்பிள்ளைக்குப் பதிலாக இஸ்ரயேலருக்குள் இருந்து நான் லேவியரைத் தெரிந்துகொண்டேன். இந்த லேவியர் எனக்குரியவர்கள். 13 ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.
14 சீனாய் பாலைவனத்தில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 15 “நீ லேவியரைக் குடும்பங்களாகவும், வம்சங்களாகவும் கணக்கிடு. ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஒவ்வொரு ஆணையும் கணக்கிடு” என்றார். 16 யெகோவாவின் வார்த்தையினால் கட்டளையிடப்பட்டபடியே மோசே அவர்களைக் கணக்கிட்டான்.
40 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய முதற்பேறான இஸ்ரயேலின் ஆண்கள் எல்லோரையும் கணக்கிட்டு, அவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை தயார்செய்ய வேண்டும். 41 இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களுக்குப் பதிலாக லேவியரை எனக்காக எடுத்துக்கொள்ளவேண்டும். இஸ்ரயேலரின் கால்நடைகளின் தலையீற்றுகளுக்குப் பதிலாக லேவியரின் வளர்ப்பு மிருகங்களின் தலையீற்றுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். நான் யெகோவா” என்றார்.
42 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேலரின் முதற்பேறுகளைக் கணக்கிட்டான். 43 பெயர் பதிவு செய்யப்பட்ட ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய முதற்பேறான ஆண்களின் மொத்தத்தொகை 22,273 பேர்கள்.
44 மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 45 “இஸ்ரயேலின் முதற்பேறான எல்லா ஆண் பிள்ளைகளுக்குப் பதிலாக லேவியரையும், அவர்களின் மந்தைகளுக்குப் பதிலாக லேவியரின் மந்தைகளையும் பிரித்தெடு. லேவியர் எனக்குரியவர்கள். நான் யெகோவா. 46 ஆனால் லேவியரின் எண்ணிக்கையிலும் அதிகமாயிருக்கிற இஸ்ரயேலரின் முதற்பேறான 273 பேர்களை மீட்பதற்கு, 47 பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி ஒவ்வொருவனுக்கும் ஐந்து சேக்கலை வசூலிக்க வேண்டும். ஒரு சேக்கல் இருபது கேரா. 48 கூடுதலாக இருக்கும் இஸ்ரயேலரின் மீட்புப் பணத்தை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடுக்கவேண்டும்” என்றார்.
49 எனவே, லேவியரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாயிருந்த இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களிடமிருந்து மீட்புப் பணத்தை மோசே வசூலித்தான். 50 பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறையின்படி, 1,365 சேக்கல் எடையுள்ள வெள்ளியை, இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களிடமிருந்து வசூலித்தான். 51 மோசே, யெகோவாவின் வார்த்தையால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியே, அந்த மீட்புப் பணத்தை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடுத்தான்.
<- எண்ணாகமம் 2எண்ணாகமம் 4 ->