7 இந்த இடத்தில் யூதாவினுடைய, எருசலேமினுடைய திட்டங்களை அழித்துப்போடுவேன். அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களின் கையிலுள்ள வாளினால் நான் அவர்களை விழப்பண்ணுவேன். அவர்களின் உடல்களைப் பூமியின் மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன். 8 நான் இந்தப் பட்டணத்தைப் பாழாக்கி, அதை ஒரு கேலிக்குரியதாக்குவேன். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள். 9 அவர்களை தங்கள் மகன்களின் மாம்சத்தையும், மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச் செய்வேன். அவர்களை கொல்லவேண்டுமென்றிருக்கும் அவர்களுடைய பகைவர்களினால் அவர்கள் முற்றுகையிடப்பட்டு துன்பப்படும்போது அவர்கள், ஒருவர் மற்றவரின் மாம்சத்தைச் சாப்பிடுவார்கள்.
10 “அதன்பின் உன்னோடு வந்த மனிதர் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த ஜாடியை உடை. 11 நீ அவர்களிடம், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உடைக்கப்பட்டு திருத்த முடியாதிருக்கிற இக்குயவனுடைய ஜாடியைப்போல் நான் இந்த தேசத்தையும், இந்தப் பட்டணத்தையும் நொறுக்கிப் போடுவேன். தோப்பேத்தில் இடமில்லாமல் போகுமட்டும் இறந்தவர்களை அங்கே புதைப்பார்கள். 12 இந்த இடத்திற்கும், இங்கு வாழ்பவர்களுக்கும் இப்படியே செய்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தப் பட்டணத்தை தோப்பேத்தைப் போலாக்குவேன். 13 எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் வீடுகளும் தோப்பேத்தைப்போல் கறைப்படுத்தப்படும். நட்சத்திர சேனைகளுக்குத் தங்கள் கூரைகளின்மேல் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்திய எல்லா வீடுகளும் அப்படியே கறைப்படும்.’ ”
14 அதன்பின் எரேமியா, யெகோவா தன்னை இறைவாக்கு உரைக்கும்படி அனுப்பின தோப்பேத்திலிருந்து திரும்பிவந்தான். அவன் யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று எல்லா மக்களிடமும் சொன்னதாவது: 15 “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்; இந்த மக்கள் தலைக்கனம் உள்ளவர்களானபடியாலும், என் வார்த்தைகளைக் கேட்காதபடியாலும் நான் இப்பட்டணங்களின் மேலும், அதைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்களின் மேலும் அவைகளுக்கு எதிராக நான் கூறியிருந்த எல்லா பேராபத்துக்களையும் கொண்டுவருவேன் என்கிறார்’ என்றான்.”
<- எரேமியா 18எரேமியா 20 ->